இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக ராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (28) இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய மீன்பிடி நீர்நிலைகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதிய சம்பவத்தை ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் 27 ஆம் திகதி மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் வெளியேறினர்.
அடுத்த நாள் கடல் எல்லையைத் தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தனது கடித்தில் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி ஆபத்தான முறையில் நிகழ்ந்து வருவதாகவும், தமிழக கடற்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ச்சியான கைதுகள் மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் பொருளாதார நெருக்கடியிலும் நிச்சயமற்ற தன்மையிலும் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 61 மீனவர்களும் 248 மீன்பிடி படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன.
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற கைதுகளைத் தடுக்க பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குவதற்கும், பொருத்தமான இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விடயத்தை அவசரமாக எடுக்குமாறு மத்திய அரசை ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் தமிழக மீனவர்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கும், இந்திய மீன்பிடி படகுகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மண்டபம் மீனவர் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதாலும், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறுவதாலும் கோபம் அதிகரித்து வருவதால், பிராந்தியம் முழுவதும் மீன்பிடி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















