கடந்த 1ம் திகதி இரவு நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகேநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரகஸ்ஹந்திய பகுதியில், இக்குற்றத்தைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 24 வயதுடைய பொரளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் இக்குற்றச் செயல் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 1 ஆம் திகதி வீடொன்றுக்குள் இருந்த மூன்று நபர்களை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததோடு, அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் படுகாயமடைந்தனர்.













