இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது.

இதேவேளை, 78 சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதவேளை, 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் பிரதேச செயலாளர் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.
இதில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ.மஜீத் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் இன்றைய தினம் காலை அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,பிரதி ஆணையாளர்,மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய கொடியினை மாநகரசபை ஆணையாளரும் மாநகரசபை கொடியினை மாநகர முதல்வரும் ஏற்றியதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.

இதேவேளை, இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரனால் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள்,பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















