கடந்த ஆண்டு இறுதியில் அட்லாண்டிக் கடலில் தனியாகப் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட டொராண்டோவைச் சேர்ந்த நபர், திருட்டு மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
31 வயதான முகமது யாசித் சலே (Mohammad Yazed Saleh), நோவா ஸ்கோடியா (N.S.) மாகாண நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் ஆல்பர்ட்டாவில் திருடப்பட்ட ‘ஃபோர்டு எஃப்-150’ ரக பிக்கப் டிரக்(Ford F-150 pickup truck ) ஒன்றை ஓட்டிச் சென்று, கேப் பிரெட்டன் கடற்கரையில் உள்ள ஒரு படகு சங்கத்திலிருந்து சிறிய மீன்பிடிப் படகு ஒன்றைத் திருடி கடலுக்குள் சென்றுள்ளார்.
படகு திருடப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர் , நியூஃபவுண்ட்லாந்து அருகே உள்ள செயின்ட்-பியர்-மிக்கெலான் பிரெஞ்சு தீவுகளுக்கு அப்பால் அந்தப் படகு காணப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களில், கனடிய கடலோர காவல்படை, ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து, நோவா ஸ்கோடியாவிற்கு கிழக்கே 300 கி.மீ தொலைவில் உள்ள சேபிள் தீவு (Sable Island) அருகே தத்தளித்துக் கொண்டிருந்த சலேவை மீட்டனர்.
2025 செப்டம்பர் 30, முதல் சிறையில் இருக்கும் சலேவுக்கு, அரசு மற்றும் தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து எட்டு மாத சிறைத்தண்டனையை பரிந்துரைத்துள்ளனர்.
அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைக் கணக்கில் கொண்டு, அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
பதிலாக, அவர் மீது இருந்த ஆயுதக் குற்றச்சாட்டுகள் மற்றும் பிணை நிபந்தனை மீறல் தொடர்பான பிற வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.
சலே ஏன் அந்தப் படகினைத் திருடினார்? அவர் எங்கே செல்ல முயன்றார்? என்பது குறித்த தெளிவான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
முன்னதாக நீதிமன்றத்தில் பேசிய சலே, “ஆல்பர்ட்டாவில் எனக்குப் பெரிய தொழில் இருந்தது, அங்கு எனக்கு அரை மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. என் உயிருக்கு பயந்துதான் அங்கிருந்து வெளியேறினேன்,” என்று கூறியிருந்தார்.
அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள தீர்ப்பின் போது, இந்தச் சம்பவம் குறித்த முழுமையான உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















