மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகள் பிரித்தானிய அரசாங்கத்தைப் உலுக்கி வரும் நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மரின் மிக நெருக்கமான அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பு நிர்வாக பணிப்பாளராக இருந்த டிம் ஆலன் இன்று (9) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ‘புதிய குழுவை உருவாக்க வழிவிடும் வகையில்’ தாம் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமரின் பணிக்குழாம் பிரதானியாக இருந்த மோர்கன் மெக்ஸ்வீனோ நேற்று பதவி விலகினார்.
தொழிலாளர் கட்சியின் தேர்தல் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய இவர், எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியுள்ள பீட்டர் மண்டெல்சனை அமெரிக்க தூதுவராக நியமிக்கப் பரிந்துரைத்ததற்காகப் பொறுப்பேற்று விலகியுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரான பீட்டர் மண்டெல்சன், ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அண்மையில் வெளியான ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது, பிரித்தானிய வணிக அமைச்சராக இருந்த மண்டெல்சன் ரகசிய அரசாங்கத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் தூதுவர் பதவியிலிருந்து மண்டெல்சனை பிரதமர் நீக்கினார்.
தவறான நபரை முக்கிய இராஜதந்திர பதவிக்குத் தேர்ந்தெடுத்ததற்காகப் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார்.
இருப்பினும், அவரது தலைமைப் பண்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்தநிலையில். முக்கிய ஆலோசகர்களின் விலகல், ஸ்டார்மரின் 18 மாத கால ஆட்சியில் மிக மோசமான அரசியல் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.
















