இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் கலந்து கொள்வார் என்பதை கேட்ஸ் அறக்கட்டளை உறுதிப்படுத்தியது.
அத்துடன், நிகழ்வில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் கலந்து கொள்ள மாட்டார் என்ற ஊடக அறிக்கைகளை தவறானது என்றும் கேட்ஸ் அறக்கட்டளை நிராகரித்தது.
ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற முன்னணி தொழில்நுட்ப நபர்களுடன் இந்த உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் பங்கெடுப்பார்.
பில் கேட்ஸ் திங்களன்று ஆந்திராவில் உள்ள அமராவதிக்கு பயணம் மேற்கொண்டு சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மாநிலத்தின் புதுமைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவை (மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.















