சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாட்டின் பிரஜைகள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
குடிமக்கள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எந்தவொரு அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்றும் இது தொடர்பில் GMOA வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஒவ்வொரு தொழில்முறை நிபுணரும் தங்கள் சேவைகளை சுதந்திரமாகவும், மிரட்டல் அல்லது அச்சுறுத்தல்கள் இல்லாமல் தொடரவும் உரிமை உண்டு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டின் மருத்துவமனை அமைப்பிற்குள் மருத்துவர்கள் மற்றும் முழு சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகள் நீடிப்பதாகவும் GMOA சுட்டிக்காட்டியது.
குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களின் பணிச்சூழலுக்குள் நிபுணர்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு வலுவான மற்றும் நம்பகமான வழிமுறை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.















