எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை மற்றும் சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத கேள்வி அதிகரிப்பு காரணமாக தற்காலிகமாக விநியோகத் தட்டுப்பாடு நிலவியதாக நிறுவனம் விளக்கியுள்ளது.
இந்த வாரத்திற்குள் அதிகளவிலான எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 284,000 வீட்டு உபயோக எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை மேலும் 351, 000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் தேவையான மேலதிக கையிருப்புகளுக்கு ஏற்கனவே கட்டளையிடப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் மேலதிக எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைய அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
எரிவாயு தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், வழக்கம் போல் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.














