கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B இல் முதலிடத்தைப் பிடித்தது.
இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்திருந்திருந்த நிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
இதில், 2024 இல் நடந்த இறுதி டி:20 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறாத சிம்பாப்வே, மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில் 179 ஓட்டங்கள் என்ற சிறந்த சேஸை முடித்த பின்னர் நடப்பு டி:20 உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாத அணியாக மாறியது.
நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் சதம் விளாசிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க 41 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார்.
அவருக்கு அடுத்தபடியாக பவன் ரத்நாயக்க 25 பந்துகளில் 44 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் முசரபானி, பிராட் எவன்ஸ் மற்றும் கிரேம் க்ரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இவர்கள் தவிர ரியான் பர்ல் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியானது 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரையன் பென்னட் 48 பந்துகளில் 63 ஓட்டங்களையும், அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கந்தர் ராசா தெரிவானார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இலங்கை அணியானது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
இந்தப் போட்டி கண்டி, பல்லேகலவில் நடைபெறும்.
அதேநேரம், அடுத்த திங்கட்கிழை (23) நடைபெறும் போட்டியில் சிம்பாப்வே, மேற்கிந்தியத்தீவுகளை எதிர்கொள்ளும்.
இந்தப் பேட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.













