தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை 12 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 1-ம் திகதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான, சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு, மீண்டும் பாதாள அறைக்கு கொண்டு செல்லப்படும்.
1915-ம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்கப்படவில்லை. 98 ஆண்டுகளுக்கு பிறகு 2013-ம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை மீண்டும் பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
















