இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது.
பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer )தலைமையிலான அரசாங்கம், ‘குற்றவியல் மற்றும் பொலிஸ் சட்டமூலத்தில்’ கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்தால், அந்தப் படத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் 48 மணித்தியாலங்களுக்குள் தொழில்நுட்ப நிறுவனங்கள் அகற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு சமூக ஊடகத்தையும் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஒருமுறை தளத்தில் முறைப்பாடளித்தால், ஏனைய அனைத்துத் தளங்களிலிருந்தும் அந்தப் படம் நீக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஒரு முறை நீக்கப்பட்ட படம், மீண்டும் அதே தளத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பதிவேற்றப்படுவதைத் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்க வேண்டும்.
இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அவர்களின் உலகளாவிய மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிகளை மதிக்காத இணையதளங்களை பிரித்தானியாவில் முழுமையாக முடக்குவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.














