வட அயர்லாந்தின் அனைத்து பிரதான நீரோட்டப் பாடசாலைகளும் (Mainstream Schools), விசேட கல்வித் தேவையுடைய குழந்தைகளுக்கான (SEN) பிரத்யேக வகுப்புகளை அமைக்க வேண்டும் என கல்வி அமைச்சர் (Paul Givan) பால் கிவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாடசாலைகளின் தலைவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கல்வி அதிகார சபையுடன் (Education Authority) இணைந்து இந்தப் புதிய ஏற்பாடுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் விசேட தேவையுடைய குழந்தைகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 2026/27 கல்வியாண்டில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான பாடசாலை இடங்களில் சுமார் 400 இடங்கள் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 25 சதவீத பாடசாலைகள் மட்டுமே இத்தகைய சிறப்பு வகுப்புகளைக் கொண்டுள்ளன.
கல்வி அமைச்சரின் இந்த நடவடிக்கையை ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
குழந்தைகளுக்குத் தகுந்த கல்விச் சூழலை அவர்களின் சொந்த சமூகங்களிலேயே வழங்குவது அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்தப் புதிய வகுப்புகளை அமைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













