அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்காக, இந்தியா மீது கூடுதல் வரிகளையும் விதித்தார்.
இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி டிரம்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்கா கூறியது.
மேலும், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ரிலையன்ஸ் , இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் HBCL மிட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளன.
வெனிசுலாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா போன்ற உலக நாடுகளுக்கு அமெரிக்கா கண்காணிப்பில் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு, 3 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
இந்தக் கப்பல்கள் மார்ச் மாதத்தில் இந்தியா வர உள்ளன.
2019ம் ஆண்டு அமெரிக்கத் தடைகளுக்கு முன்பு, வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்கும் 3வது பெரிய நாடாக இந்தியா இருந்தது.
தற்போது, மீண்டும் எண்ணெய் கொள்முதலை துவக்கியுள்ளது.














