ஈரானின் இரண்டாவது கப்பலை திருகோணமலைக்கு கொண்டு சென்றதன் நோக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் நேற்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் ஈரான் அரசாங்கம் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக தெரிவித்த விடயம் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பட்டிருந்தது.
திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஈரானின் இரண்டாவது கப்பல் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் பல கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்துவதில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கம் கோரப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தற்போது அந்தக் கப்பல் இலங்கையின் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்தார். இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அதனை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார். அப்படி இல்லாவிட்டால் சர்வதேச உடன்படிக்கைகளின் அர்த்தமே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே அத்தகைய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாது என அரசு நம்புகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், இந்த மீட்பு நடவடிக்கையில் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான உள்நாட்டு பிரதிநிதியுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவித்தார். எனினும், இந்த மீட்பு நடவடிக்கை முதன்மையாக இலங்கை அரசின் பொறுப்பாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதன் இரண்டாம் கட்டமாக சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதனுடன் தொடர்பாக, இலங்கையின் கடல் எல்லைகளில் அல்லது அதற்கருகில் வேறு கப்பல்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இதுவரை அத்தகைய எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், முதல் மீட்பு நடவடிக்கைக்கு ஈரான் அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக ஈரான் அரசாங்கம் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போது முழுமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அவர்களுக்கு திருப்திகரமாக இருக்கும் என அரசு எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.













