மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஒப்பந்தத்தின்படி குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்ததாகவும், அமைச்சரவையின் அனுமதி மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இது கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், குறித்த நிறுவனத்துடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளின்படி, இரண்டு மாத காலத்திற்குள் இப்பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியானது எனவும், இன்று முதல் ஐந்து ஆண்டுகாலத்திற்கு அந்த நிறுவனத்திற்கு இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.













