கேம்பிரிட்ஜில் உள்ள (Addenbrooke’s Hospital) மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூளை அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஜான் ப்ராக்கென்புரி (John Brackenbury) என்ற நபர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜான் பிராக்கன்பரி 2016 நவம்பரில் மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் மதிப்பீட்டுப்படி அவருக்கு 48 மணி நேரத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அதே நேரத்தில் இருந்த மற்றொரு நோயாளிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால், அவருடைய சிகிச்சை தாமதமானது. இதன் விளைவாக அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, மருத்துவமனையின் செயல்முறைகளை மேம்படுத்த பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று தகவல் தெரிவிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனையின் அந்தத் துறை தற்போது விரைவான விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது
ஜானின் மகள் ஜென்னி டங்க் (Jenny Dunk) தனது தந்தையின் மரணத்திலிருந்து எந்தப் பாடங்களும் கற்றுக்கொள்ளப்படாதது மிகவும் வருத்தமளிப்பதாகவும் ‘வெறுக்கத்தக்கது’ என்றும் கூறினார். ‘என் அப்பாவை ஒரு மனிதராக யாரும் பார்த்ததில்லை. அனைவரும் தங்களது சுயநலத்தையும், தங்கள் புகழையும் காக்கும் முயற்சியிலேயே இருந்தனர்,’ என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான முன்னுரிமை வழங்கும் நடைமுறைகள் மற்றும் மருத்துவப் பொறுப்புத் தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது நடைபெறும் விசாரணை இந்த சம்பவத்தில் ஏற்பட்ட தவறுகளை வெளிக்கொணருமா என்பதைக் குடும்பத்தினரும் பொதுமக்களும் எதிர்பார்த்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது














