அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் இன்று பிற்பகல் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாத இறுதியில் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பிற்கான பாதையைச் சீர்செய்யும் நோக்கில், இரு நாடுகளின் பொருளாதாரத் தலைவர்களும் இன்று பாரிஸில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீனத் துணைப் பிரதமர் ஹே லிஃபெங் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைகளை வழிநடத்துகின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் வர்த்தக வரிகள் (Tariffs), சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிய வகை தாதுக்கள் (Rare earth minerals), அமெரிக்காவின் உயர்தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் சீனா வாங்கும் அமெரிக்க விவசாயப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, போயிங் விமானங்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை சீனா வாங்குவது குறித்து ட்ரம்ப் பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கப் படைகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழல் இந்தப் பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய் விலையேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா தனது தேவையில் 45% எண்ணெயை இந்தப் பாதையிலேயே பெறுகிறது.
எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க, கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதே இந்தப் பாரிஸ் பேச்சுவார்த்தையின் குறைந்தபட்ச இலக்காகும்.
பாரிய வர்த்தக மாற்றங்கள் உடனடியாக நிகழாவிட்டாலும், பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது உலகப் பொருளாதாரத்தில் ஒரு “நிலையான நங்கூரமாக” (Stabilizing anchor) அமையும் எனச் சீனா கருதுகிறது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள APEC மற்றும் G20 மாநாடுகளின் போதும் இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















