போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 155 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொகுசு கார் ஒன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே முடக்கப்பட்டது.
இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் பின்னர் நீடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான குறித்த பெண் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம், ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அந்தப் பெண்ணின் பெயரில் உள்ள மேலும் சில சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டன.
அதன்படி, வெலிகம்பிட்டிய பகுதியில் சுமார் 400 இலட்சம் (4 கோடி) ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீடும், காணியும் சட்டவிரோத பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வீட்டை இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக புலனாய்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.











