பிரித்தானியாவின் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகள் வருமானம் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, உள்நாட்டிலேயே அவர்களைத் தக்கவைக்கப்போவதாக நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) உறுதியளித்துள்ளார்.
பிரித்தானிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்வதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்துள்ள ரேச்சல் ரீவ்ஸ், இதற்காக குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் £2.5 பில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையானது நாட்டில் சுமார் 100,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லண்டனில் உள்ள வர்த்தகத் தலைவர்களிடையே உரையாற்றிய அவர், பிரித்தானியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட சில திட்டங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி, G7 நாடுகளில் மிக வேகமான AI பயன்பாட்டைக் கொண்ட நாடாக பிரித்தானியாவை மாற்றுதல்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேணுதல், உணவு மற்றும் விவசாயத் தரநிலைகளில் ஐரோப்பிய ஒன்றிய விதிகளுடன் இணங்கிச் செல்வதன் மூலம் வர்த்தகத் தடைகளை நீக்குதல் போன்ற திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் மீதான போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் குறித்து ரீவ்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, “எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் ஒவ்வொரு நாடும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்” என்று கூறிய அவர், சர்ச்சைக்குரிய ‘ரோஸ்பேங்க்’ (Rosebank) மற்றும் ‘ஜாக்டாவ்’ (Jackdaw) ஆகிய வடகடல் எண்ணெய் திட்டங்கள் குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நிதியமைச்சரின் இந்தப் பேச்சுக்களை கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சித்துள்ளது.
அரசாங்கம் பிரெக்ஸிட் (Brexit) முடிவுகளைப் பின்னோக்கித் தள்ள முயல்வதாகவும், பொருளாதாரத் தோல்விகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்துவதாகவும் நிழல் நிதியமைச்சர் மெல் ஸ்ட்ரைட் (Mel Stride) சாடியுள்ளார்.














