லண்டனில் உள்ள சொகுசு அங்காடிகளில் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மே முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலப்பகுதியில், லண்டனின் பல்வேறு பகுதிகளில் உள்ள விலை உயர்ந்த கடைகளை இலக்கு வைத்து இக்கும்பல் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களை நடத்தியுள்ளது.
செங்கற்கள், பெரிய சுத்தியல்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்தி கடைகளின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த இவர்கள், அங்கிருந்த விலையுயர்ந்த கடிகாரங்கள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள் மற்றும் பணப்பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
ஐந்து வெற்றிகரமான கொள்ளைச் சம்பவங்களின் மூலம் சுமார் £1, 46,356 பவுண்டுகள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய ஏழு பேருக்கும் கிங்கம்ஸ்டன் கிரவுன் நீதிமன்றம் (Kingston Crown Court) பல்வேறு கால அளவிலான சிறைத்தண்டனைகளை வழங்கியுள்ளது.
இதில் மேற்கு லண்டனின் பேஸ்வாட்டர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய கிறிஸ்டோபர் கிப்ஸ் என்பவருக்கு அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தனி ஒருவராக மட்டும் சுமார் 66,500 பவுண்ட் மதிப்புள்ள இரண்டு கலைப்படைப்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குற்றவாளிகளில் ஒருவரான 46 வயதுடைய லீ ஜேம்ஸ் மெக்ரெடி(Lee James McGready) , 2005-ஆம் ஆண்டு செய்த ஒரு கொலைக்காக நீண்டகால சிறைத்தண்டனை பெற்று, பிணையில் (Licence) வெளியில் இருந்த போதே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடையொன்றில் சுமார் £60,000 மதிப்புள்ள கடிகாரங்களை இவர் கொள்ளையடித்தது சிசிடிவி (CCTV) காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வழக்கில் பால் ஹியூஸ் (Paul Hughes) என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறையும், டேவிட் ரிகல்ஸ்போர்டிற்கு(David Rigglesport) மூன்று ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறையும் விதிக்கப்பட்டது.
(George O’Hare, Lee James McCready and Matthew Windras) ஜார்ஜ் ஓ’ஹாரே, லீ ஜேம்ஸ் மெக்ரெடி மற்றும் மேத்யூ விண்ட்ராஸ் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அந்தோணி முண்டே என்பவருக்கு இரண்டு ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் 150 மணிநேர ஊதியமில்லா பொதுப்பணி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.













