ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் “உதவிபெறும் மரணம்” (Assisted Dying) தொடர்பான சட்டமூலம் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
லிபரல் டெமக்ரட் கட்சியின் உறுப்பினர் லியாம் மெக்ஆர்தர் (Liam McArthur) கொண்டு வந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “உதவிபெறும் மரணம்” சட்டமூலம், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் 69-57 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இதன் மூலம் பிரித்தானியாவில் இத்தகைய சட்டத்தை அனுமதிக்கும் முதல் நாடாக மாறும் ஸ்காட்லாந்தின் முயற்சி தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்த விவாதத்தின் போது சட்டமூலத்தை எதிர்த்த உறுப்பினர்கள் ‘கட்டாயப்படுத்துதல்’ (Coercion) என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி உறுப்பினரான ஜெரமி பால்ஃபோர் (Jeremy Balfour), இந்தச் சட்டம் பலவீனமான மக்களை மரணத்தை நோக்கித் தள்ளும் ஒரு ‘Pandora’s Box’ (ஆபத்துகளின் பெட்டி) என எச்சரித்தார்.
மற்றொரு உறுப்பினர் பேம் டங்கன், “இறப்பதை விட வாழ்வதை எளிதாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், தரமான நோய்த்தணிப்பு பராமரிப்பு இல்லாத நிலையில் இது ஒரு உண்மையான தேர்வாக இருக்காது என்றும் வாதிடப்பட்டது.
இந்நிலையில் சட்டமூலத்தை முன்மொழிந்த மெக்ஆர்தர், தீர்க்க முடியாத வலியால் துடிக்கும் நோயாளிகளுக்கு இந்த முடிவு ஒரு “பேரிடியாக” இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்த வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் கட்சி பாகுபாடின்றித் தமது மனசாட்சியின் அடிப்படையில் வாக்களிக்க (Free vote) அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி (John Swinney) இந்தச் சட்டமூலத்தை எதிர்த்த நிலையில், அதன் தோல்வி குறித்து அவர் “நிம்மதி” அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
1999-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட மூன்றாவது சட்டமூலம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












