புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உடப்பு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.
கடந்த மார்ச் 17 அன்று புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தனித்துவமான கலாசாரப் பின்னணியைக் கொண்ட உடப்பு (Udappuwa) கிராமத்திற்குச் சென்றார்.
இக்கிராம மக்கள் தென்னிந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள அக்கமடம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
17-ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்து குடியேறிய இவர்களின் வாரிசுகள், இன்றும் தங்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.
உடப்பு ஸ்ரீ பார்த்தசாரதி ஆலயத்தில் வழிபாடு செய்த உயர்ஸ்தானிகர், அங்குள்ள மக்களுடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.
ஸ்ரீ திரௌபதி அம்மன் வழிபாடு மற்றும் வருடாந்தத் திருவிழாவின் போது நடைபெறும் தீ மிதித்தல் போன்ற தங்களின் தனித்துவமான சடங்குகளை இன்றும் கடைப்பிடித்து வருவதாக மக்கள் அவரிடம் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான ‘மக்களுக்கு இடையிலான உறவின்’ (People-to-people links) ஒரு சிறந்த அடையாளமாக உடப்பு விளங்குவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ‘டிட்வா-வுக்குப் பிந்தைய புனர்வாழ்வுத் திட்டத்தின்’ (post-Ditwah rehabilitation package) கீழ், புத்தளம் மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கும், இலங்கையின் அபிவிருத்திக்கும் இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.













