பிரித்தானியாவில் இடம்பெற்ற மூன்று ஐ.ஆர்.ஏ (IRA) குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக, சின் பெயின் (Sinn Féin) கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ஆடம்ஸிற்கு (Gerry Adams) எதிராகத் தொடரப்பட்டிருந்த சிவில் வழக்கு மீளப் பெறப்பட்டுள்ளது.
1973 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் லண்டன் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் ஐ.ஆர்.ஏ அமைப்பினால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்த மூவர், ஜெர்ரி ஆடம்ஸிற்கு இதில் தனிப்பட்ட ரீதியில் தொடர்பிருப்பதாகக் கூறி லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
தற்போது 77 வயதாகும் ஜெர்ரி ஆடம்ஸ், ஐ.ஆர்.ஏ அமைப்பில் ஒரு ‘முக்கியமான நபராக’ இருந்து இத்தாக்குதல்களை வழிநடத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஒன்பது நாட்கள் நடைபெற்ற நீண்ட விசாரணையின் இறுதியில், மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கைக் கைவிடுவதாக அறிவித்தார்.
“நீதிமன்ற நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துதல்” (Abuse of process) என்ற சட்ட வாதத்தின் அடிப்படையில், மனுதாரர்களுக்கு ஏற்படக்கூடிய நிதி ரீதியான பாதிப்புகளைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கைத் தொடர மனுதாரர்கள் பொதுமக்களிடம் நிதி சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள ஜெர்ரி ஆடம்ஸ், தன் மீது சுமத்தப்பட்டவை அனைத்தும் “பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள்” என்று குறிப்பிட்டார்.
அயர்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குடியரசு கொள்கைக்காகவுமே தான் நின்றதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மீது தமக்கு அனுதாபம் இருப்பதாகவும், தாமும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர்களின் வலியை உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது சட்டச் செலவுகளைத் தானே பொறுப்பேற்பதாகவும், அவற்றை மனுதாரர்கள் மீது சுமத்தப் போவதில்லை என்றும் அவர்மேலும் குறிப்பிட்டார்.
வழக்கு மீளப்பெறப்பட்டதால் தாம் “முற்றிலும் நிலைகுலைந்துள்ளதாக” பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பெர்ரி லேகோக் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கங்கள் செய்யத் தவறிய ஒரு விடயத்தை, அதாவது ஜெர்ரி ஆடம்ஸை நீதிமன்றக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்ததை ஒரு வெற்றியாகவே கருதுவதாக மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஆர்.ஏ அமைப்பு வட அயர்லாந்து மோதல்களின் போது சுமார் 1,700 பேரின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது.
ஜெர்ரி ஆடம்ஸ் இதற்கு முன்னர் ஐ.ஆர்.ஏ உறுப்பினராக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், போதிய ஆதாரங்கள் இன்மையால் அந்த வழக்குகள் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















