நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேரை கொலை செய்த வால்டோ கலோகேன் (Valdo Calocane), அந்தத் தாக்குதல்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நாட்டிங்ஹாம்ஷையர் காவல்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2023 ஜூன் 13 அன்று பார்னபி வெப்பர்(Barnaby Webber) , கிரேஸ் ஓ’மாலி-குமார் (, Grace O’Malley-Kumar) மற்றும் இயன் கோட்ஸ் (Ian Coates) ஆகியோரை வால்டோ கலோகேன் குத்திக் கொலை செய்தார்.
இச்சம்பவத்திற்கு முன்னரே, அதாவது 2022 செப்டம்பரில், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத கலோகேனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த வாரண்ட் நீண்டகாலமாகச் செயல்படுத்தப்படாமல் இருந்தமை தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதியரசர் டெபோரா டெய்லர் தலைமையில் லண்டனில் நடைபெற்று வரும் விசாரணையில் சாட்சியமளித்த முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரி கேட் மெய்னெல் (Kate Meynell), கலோகேன் கைது செய்யப்படாததற்கு “எந்த சாக்குகளும் இல்லை” என ஒப்புக்கொண்டார்.
பிடியாணை தொடர்பான தகவல் பொலிஸ் கணினி அமைப்பில் இருந்தும், அது முறையாகக் கண்காணிக்கப்படாத ஒரு மின்னஞ்சல் பெட்டிக்குச் சென்றதால் கவனிக்கப்படாமல் போனதாகக் கூறப்பட்டது.
மேலும், கொலைகள் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மே 5-ஆம் திகதி , மற்றுமொரு தாக்குதல் தொடர்பாக லெய்செஸ்டர்ஷையர்(Leicestershire) காவல்துறையினர் கலோகேனைச் சந்தித்தபோதும், நிலுவையில் இருந்த வாரண்டைக் கவனித்தும் அவரைக் கைது செய்யத் தவறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கலோகேன் முன்னரே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், அவரது மனநலப் பின்னணி மற்றும் முந்தைய வன்முறைச் சம்பவங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, இந்தத் துயரம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என்று வாதிட்டார்.
இதற்கிடையில், இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் குழுக்களில் “அருவருப்பான” கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதும், அது குறித்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்படாததும் விசாரணையில் அம்பலமானது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்குப் பின்னர் , பிடியானைகளை கையாளும் முறையைத் தங்கள் படை முழுமையாக மாற்றியமைத்துள்ளதாகவும், தற்போது அவை தினசரி அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதாகவும் மெய்னெல் தெரிவித்தார்.
இதேவேளை, வால்டோ கலோகேன் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 2024 ஜனவரியில் அவருக்கு மனநல மருத்துவமனை சிகிச்சை உத்தரவு வழங்கப்பட்டது. எனினும், ஆரம்பத்திலிருந்தே காவல்துறையின் விசாரணை மற்றும் இந்தத் தீர்ப்பு குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.














