மத்திய ஆபிரிக்காவின் கேப் வர்டி (Cape Verde) தீவுகளில் விடுமுறையில் இருந்தபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 1,700க்கும் மேற்பட்ட பிரிட்டிஸ் பிரஜைகள் உலகின் மிகப்பெரிய சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்களில் ஒன்றான TUI-க்கு எதிரான சட்ட நடவடிக்கையில் தற்சமயம் இணைந்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னரும் கூட குறித்த தீவுகளில் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களை தொடர்பு கொண்டதாக இந்த வழக்கினை முன்னெடுத்துச் செல்லும் பிரிட்டிஸ் சட்ட நிறுவனமான இர்வின் மிட்செலின் (Irwin Mitchell) சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அண்மைய ஆண்டுகளில் அங்கு விடுமுறையைக் கழித்த பின்னர் குறைந்தது எட்டு பிரிட்டிஸ் பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பட்டுள்ளனர்.
கேப் வர்டி விடுமுறைத் தலங்களில் மோசமான சுகாதாரம் மற்றும் உணவுத் தரங்களால் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடுத்துள்ள பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கூட்டு வழக்கை பயண நிறுவனமான TUI தற்சமயம் எதிர்கொண்டுள்ளது.
TUI நிறுவனம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அந்தத் தலங்களில் தங்கியிருந்தபோது, 2022 ஆம் ஆண்டுக்கும் இந்த ஆண்டின் தொடக்கத்திற்கும் இடையில் சுமார் 1,500 விடுமுறைப் பயணிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக இர்வின் மிட்செல் சட்ட நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இதனிடையே, கேப் வர்டிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடையிலான வயிற்றுக் கோளாறுகள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரியில் இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் மேற்கு ஆப்பிரிக்கத் தீவுக்கூட்டத்திற்குப் பயணம் செய்வது குறித்து பிரித்தானியர்களை எச்சரித்தனர்.
இந்த நிலையில், ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்ட TUI நிறுவனம் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது.
மேலும், இந்தக் கட்டத்தில் குற்றச்சாட்டுகள் தொரட்பில் ஒரு அறிக்கையை வெளியிடும் நிலையில் நாங்கள் இல்லை என்றும் கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் TUI நிறுவனம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விடுமுறைப் பயணிகளை கேப் வெர்டேவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

















