தமிழகத்தின் திருத்தணி தொகுதியில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமிழக வெற்றி கழக (TVK) வேட்பாளர் சத்தியகுமார் உட்பட 10 நபர்கள் மீது திருத்தணி பொலிஸார் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடத்துவதற்கும் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவருமான விஜய், சென்னையில் நடைபெறவிருந்த தனது தேர்தல் பிரச்சாரத்தை இரத்து செய்தார்.
கட்சி வட்டாரங்களின்படி, விஜய் வில்லிவாக்கம் மற்றும் டி நகர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இரு இடங்களுக்கும் இடையே சென்று வர காவல்துறை ஒதுக்கிய நேரம் போதுமானதாக இல்லை என்று கட்சி குற்றம் சாட்டியது.
இந்தக் கட்டுப்பாடுகளையும் நேர நெருக்கடிகளையும் காரணம் காட்டி, அன்றைய தனது பிரச்சாரத்தை இரத்து செய்ய விஜய் முடிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்க தமிழக வெற்றிக் கழகமும் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் நிலவிய பெரும் அரசியல் களங்களுக்கான பிரச்சாரம் நேற்றைய (07) தினத்துடன் முடிவடைந்தது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர் வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களைக் கவர முயன்றதோடு, தங்களது அரசியல் எதிரிகள் மீது கடுமையான தாக்குதல்களையும் தொடுத்தனர்.
அசாமில் 126 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் நாளை வியாழக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
















