உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு, பிரித்தானியா தன்னை ஒரு வலிமையான நாடாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் Sir Keir Starmer தெரிவித்துள்ளார்.
தற்போது வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ‘The Guardian’ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், ஈரானிய மோதல் போன்ற வெளிநாட்டு விவகாரங்களால் பிரித்தானிய மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் அல்லது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளால் பிரித்தானியக் குடும்பங்களின் மின்சாரக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு பாதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் தொலைபேசியூடாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள பிரதமர் ஸ்டார்மர், ஹோர்முஸ் நீரிணை ஊடான பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளார்.
இந்த நீரிணை மூடப்பட்டிருந்தமையால் பிரித்தானியாவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.
இதேவேளை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமே பிரித்தானியாவால் உண்மையான எரிசக்தி சுதந்திரத்தைப் பெற முடியும் எனவும் பிரதமர் Sir Keir Starmer வலியுறுத்தியுள்ளார். எனினும், வடகடலில் எண்ணெய் அகழ்வுக்குத் தடை விதித்துள்ளமை நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் என எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமரின் கருத்துக்கு விமர்சனம் வெளியிட்டுள்ளது.












