பிரித்தானியாவின் “மிக அழகான நாணயம்” என்று போற்றப்படும் அபூர்வ தங்க நாணயம் ஒன்று ஏலத்தில் 110,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வேல்ஸின் பெங்கோர் (Bangor) பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சொத்து மதிப்பீட்டின் போது, ஒரு தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து இந்த “உனா அண்ட் த லயன்” (Una and the Lion) எனும் ஐந்து பவுண்டு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
இது 1839-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற செதுக்குனர் வில்லியம் வயோன் (William Wyon) என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது.
எட்மண்ட் ஸ்பென்சரின் “த ஃபேரி குயீன்” (The Faerie Queene) என்ற கவிதையில் வரும் ‘உனா’ எனும் கதாபாத்திரமாக மகாராணி இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய ஆட்சியாளர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமாக நாணயத்தில் சித்தரிக்கப்பட்டது. இதுவே முதல் முறையாகும்.
மகாராணி ஒரு சிங்கத்தை வழிநடத்திச் செல்வது போன்ற வடிவம், அவரது நிதானத்தையும் பிரித்தானிய தேசத்தின் வலிமையையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சுழற்சிக்கு வராத இந்த வகை நாணயங்கள் 300-க்கும் குறைவாகவே தயாரிக்கப்பட்டதால், இவை உலகெங்கிலும் உள்ள நாணயச் சேகரிப்பாளர்களிடையே “புனிதச் சின்னமாக” (Holy Grail) கருதப்படுகின்றன.
செஸ்டர் (Chester) பகுதியில் நடைபெற்ற ஏலத்தில், பலத்த போட்டிக்கு மத்தியில் இந்த நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு முன்னர் இதே போன்ற ஒரு நாணயம் அதிகபட்சமாக 340,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் அரிதான மற்றும் கலைநயம் மிக்கது என்பதால் இது உலகின் மதிப்புமிக்க நாணயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ஏலம் விடப்பட்ட இந்த நாணயம் நல்ல நிலையில் இருப்பதாகவும், அதன் கலைத்தன்மை மாறாமல் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












