பிரித்தானியாவிற்கும் மொரிஷியஸிற்கும் இடையிலான சாகோஸ் தீவுகள் (Chagos Islands) தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையை பிரித்தானிய அரசாங்கம் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடும் எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்க பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான அரசாங்கம் கடந்த காலங்களில் உடன்படிக்கை செய்திருந்தது.
எனினும், இந்தத் திட்டத்தை “முழுமையான பலவீனம்” என வர்ணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இதனை ரத்து செய்யுமாறு பிரித்தானியாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
இதேவேளை, இந்த உடன்படிக்கை அமுலுக்கு வருவதற்கு அமெரிக்காவின் உத்தியோகபூர்வ சம்மதக் கடிதம் சட்ட ரீதியாக அவசியமாகும். ஆனால், இதுவரை அமெரிக்காவிடமிருந்து அத்தகைய கடிதம் கிடைக்கப்பெறவில்லை.
மேலும், பிரித்தானிய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படவுள்ள நிலையில், இதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றப் போதிய கால அவகாசம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், மே மாதம் நடைபெறவுள்ள மன்னரின் உரையில் (King’s Speech) இந்தச் சட்டம் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரித்தானியாவின் இந்தக் திடீர் பின்வாங்கல், மொரிஷியஸ் மற்றும் சர்வதேச இராஜதந்திர மட்டத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த உடன்படிக்கையின்படி:சாகோஸ் தீவுகளின் இறையாண்மை மொரிஷியஸிடம் ஒப்படைக்கப்படுவதுடன் , அங்குள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘டியேகோ கார்சியா’ (Diego Garcia) இராணுவத் தளத்தை பிரித்தானியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பயன்படுத்துவதற்காக, ஆண்டுக்கு சுமார் 101 மில்லியன் பவுண்டுகளை மொரிஷியஸிற்கு பிரித்தானியா வாடகையாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















