பிரித்தானிய இராணுவத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், லண்டனில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியபோது கடந்த மார்ச் மாதம் தாக்கப்பட்டதில் பலத்த மூளைக் காயம் அடைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரரான 39 வயதுடைய நூர் அஜீஸ் அகமத்சாய் (Noor Aziz Ahmadzai), கடந்த மாதம் வேமவுத் (Weymouth) ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியில் இருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானார்.
இத்தாக்குதலில் அவரது மூளையில் கடும் இரத்தக் கசிவு ஏற்பட்டு, அவர் மயக்கமடைந்த நிலையில் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் சுயநினைவிற்குத் திரும்பியுள்ள போதிலும், அவரது பேச்சு மற்றும் உடல் நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இவர் 2021-ல் தாலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியபோது, பிரித்தானிய இராணுவத்திற்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ‘ஆப்கான் இடமாற்றம் மற்றும் உதவி கொள்கையின்’ (ARAP) கீழ் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டார்.
பிரித்தானிய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே நூரின் விருப்பமாக இருந்தது.
ஆனால், அவர் பிரித்தானியப் பிரஜையாக மாறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் அங்கேயே வசிக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுமிகளைப் பிரித்தானிய போக்குவரத்துப் பொலிஸார் (BTP) கைது செய்து, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காகப் பிணையில் விடுவித்துள்ளனர்.
பிரித்தானியாவிற்காகத் தனது உயிரைப் பணையம் வைத்துப் போரிட்ட ஒரு வீரர், இன்று அந்த நாட்டிலேயே தாக்குதலுக்கு உள்ளாகி, உரிய அங்கீகாரமும் உதவியும் இன்றி மருத்துவமனையில் போராடி வருவது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


















