இன்று அன்னை பூபதியின் நினைவு நாள். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒரு தாயாக அவர் இருக்கிறார்.இனியும் இருப்பார்.ஏனென்றால் அவர் செய்த தியாகம் அத்தகையது.
திலீபனின் உண்ணாவிரதம் 12 நாட்கள். திலீபன் நீரோ உணவோ அருந்தவில்லை.அதைத் தாங்கும் அளவுக்கு அவருடைய உடலும் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே குடலில் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானவர். அதனால் அவருடைய உடல் பசியையும் தாகத்தையும் 12 நாட்கள் தான் தாங்கியது.
பூபதி அம்மாவின் உடல் 31 நாட்கள் தாங்கியது. பூபதி அம்மா நீர் அருந்தினார்.
இத்தனைக்கும் பூபதி அம்மா ஒரு போராளி அல்ல.போராளியின் தாய்.10 பிள்ளைகளின் தாய்.ஒரு குடும்பப் பெண்ணாக அவர் போராட்டத்தை அடை காத்த அம்மாக்களில் ஒருவராகவும் இருந்தார். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் எனப்படுவது அன்னையரின் கண்ணீரால், அன்னையரின் பசி தாகத்தால் வளர்ந்த ஒன்று .
போராட்டத்தை அடைகாத்த அதாவது அடைக்கலம் தந்த வீடுகளின் அம்மாக்கள் போருக்குப் போன தமது பிள்ளைகள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.சிலர் சோறு சாப்பிடுவதில்லை. சிலர் பாண் மட்டும் சாப்பிட்டார்கள். வேறு சிலர் இருவேளை உணவு அருந்தினார்கள்.சிலர் ஒருவேளை மட்டும் உணவு அருந்தினார்கள். இப்படிப்பார்த்தால் அன்னையரின் வயிற்றில் எரிந்த நெருப்பும் போராட்டத்தை வளர்த்தது.
பூபதி அப்படியொரு தாய்தான்.மட்டக்களப்பில் அன்னையர் முன்னணி திலீபனைப் பின்பற்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது. அந்தப் போராட்டத்தில் முதலில் ஈடுபட்ட அன்னம்மா டேவிட் போன்ற அம்மாக்கள் நிர்பந்தங்கள் காரணமாக போராட்டத்தைக் கைவிடவேண்டிய ஒரு நிலைமை தோன்றிய பொழுது பூபதி அம்மா தானாக முன்வந்து அந்தப் போராட்டத்தை கையில் எடுத்தார்.31 நாட்கள் பசியோடும் தாகத்தோடும் இருந்து உயிர் நீத்தார்.
தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றில் கிழக்கில் இருந்து ஒரு பெண் ஆளுமை அவ்வாறு தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து உயிர் நீத்தமை என்று பார்த்தால்,பூபதி அம்மா பசியாலும் தாகத்தாலும் வடத்தையும் கிழக்கையும் இணைத்தார் எனலாம்.
ஒரு போராளி எப்பொழுதும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார். அதுதான் போராட்ட மரபு.ஆனால் பூபதி அம்மா எந்த இயக்கத்திலும் இருந்தவரல்ல;பயிற்சி பெற்றவருமல்ல.எனினும் அவர் ஒரு போராளிபோல பசியை தாக்கத்தை ஆயுதமாக்கிப் போராடினார். அதனாலே தமிழ் மக்கள் மத்தியில் அவர் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒரு மகத்தான பெண் ஆளுமையாகத் திகழ்கிறார்.
பூபதி அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு இந்தக் கட்டுரை இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. முதலாவது அன்னையர் முன்னணி என்ற சிவில் அமைப்பின் முக்கியத்துவம்.இரண்டாவது,தம்மை அர்ப்பணித்துப் போராடாத தமிழ்த் தேசியக் கட்சிகள்.
முதலாம் கட்ட ஈழப்போர் காலகட்டத்தில் 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதலாவது அன்னையர் முன்னணி தோன்றியது.இலங்கைத் தீவில் தோன்றிய முதலாவது அன்னையர் முன்னணி அதுதான்.அந்த அன்னையர் முன்னணிக்குள் பாதிக்கப்பட்ட அம்மாக்களும் பெருமளவுக்கு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க குடும்பங்களில் இருந்து வந்த துணிச்சலான பெண்களும் காணப்பட்டார்கள். இந்த அன்னையர் முன்னணி அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு நடவடிக்கைகளில் இறங்கியது. இந்த அன்னையர் முன்னணிக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் இடையில் சில பல முரண்பாடுகள் ஏற்பட்டன. ஆனாலும் முதலாம் கட்ட ஈழப் போர் காலத்தில் தோன்றிய முக்கியமான சிவில் அமைப்பு என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய முதலாவது அன்னையர் முன்னணி என்ற அடிப்படையிலும்,இலங்கைத் தீவில் தோன்றிய முதலாவது அன்னையர் முன்னணி என்ற அடிப்படையிலும் யாழ்ப்பாணத்தின் அன்னையர் முன்னணிக்குப் பெரிய முக்கியத்துவம் உண்டு.
இவ்வாறு 84ஆம் ஆண்டு போராடத் தொடங்கிய அம்மாக்கள் 2006வரை அதாவது இன்றுவரையிலும் தங்கள் பிள்ளைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையான உண்மை. இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள்,கணவர்களுக்காக அன்னையர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 16 ஆண்டுகளிலும் தமிழ்த் தேசியப் பரப்பில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பது அந்த அன்னையர்கள்தான். தமிழ் மக்கள் மத்தியில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்களில் அரங்கில் முன்னணியில் நிற்பது அந்த அன்னையர்கள்தான். 42 ஆண்டுகளாக தேற்றப்படவியலாத அன்னையரின் துக்கம் தமிழ் மக்களின் போராட்டத்தில் உணர்வுபூர்வமான ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
42 ஆண்டுகளாக அன்னையரின் கண்ணீருக்கு முடிவில்லை;நீதியும் இல்லை. ஏன் ?
இரண்டாவது விடயம்,கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் அன்னையர்கள்தான் தொடர்ந்து போராடுகிறார்கள்.அரசியல் கைதிகளும் அவ்வப்போது போராடினார்கள்.இப்பொழுது தையிட்டியில் ஒவ்வொரு பௌர்ணமி நாளும் போராட்டம் தொடர்கிறது.
இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவை அவற்றுக்கென்று தனித்துவமான காரணங்களைக் கொண்டிருக்கின்றன. அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காகப் போராடுவார்கள். காணாமல் ஆக்கப்பட்டவரின் பெற்றோரும் உறவினரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அல்லது அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார்கள்.தையிட்டிப் போராட்டம் நிலப்பறிப்பு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரானது. இதில் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒவ்வொரு இலக்கு உண்டு. இவை பெரும்பாலும் ஏதோ ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டு நடக்கும் போராட்டங்கள். இவற்றை ஒரு பெருந்தொகுப்பு ஆக்கினால் அவை பெரும்பாலும் நீதியைக் கேட்கும் போராட்டங்கள்.
கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களின் இதுபோன்ற போராட்டங்கள் நீதிக்கான போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன. இந்த இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்கலாம். நீதிக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கிய போராட்டமும் ஒன்றா ?
தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கூறுகிறார்கள்,இன அழிப்புக்கு எதிரான நீதியே இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வாகவும் அமைய வேண்டும் என்று. அதனை அவர்கள் பரிகார நீதி என்று அழைக்கிறார்கள்.தாயகத்தில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு தொகையினரும் இனப்பிரச்சினைக்கு பரிகாரநீதியைக் கேட்கிறார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் ஆசனங்களை வென்ற தமிழரசுக் கட்சியும் உட்பட சில தமிழ்க் கட்சிகள் 2015ஆம் ஆண்டு நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டன. ஆனால் அந்தப் பரிசோதனையில் தாங்கள் தோற்றுப்போய் விட்டதாக சுமந்திரன் பின்னர் தெரிவித்தார். அதாவது ஐநாவின் மேற்பார்வையிலான நிலை மாறுகால நீதி ஒரு தோற்றுப் போன பரிசோதனை ஏன்னு அதன் தமிழ்ப் பங்காளி கூறுகிறார்.
நிலை மாறு கால நீதியின் கீழேதான் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.அதற்காக நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு ஒரு புதிய யாப்பு இடைக்கால வரைபுவரை முன்னேறியது. அந்த யாப்பு உருவாக்க முயற்சியின் ஒரு கட்ட விளைவுதான் எனக்கிய ராஜ்ய என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு.
தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது கிட்டத்தட்ட நான்கு வகைப்பட்ட தீர்வுகள்அல்லது முன்மொழிவுகள் மேசையில் உண்டு. முதலாவது பரிகார நீதி. அதை அதன் பிரயோக வடிவத்தில் சொன்னால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெகுசன வாக்கெடுப்பை நடத்துவது.
இரண்டாவது தீர்வு சமஸ்டி. மூன்றாவது எக்கிய ராஜ்ய. நான்காவது தீர்வு, 13ஆவது திருத்தத்தில் இருந்து தொடங்குவது
இந்த நான்கு தீர்வுகள் அல்லது தீர்வு முன்மொழிவுகளுக்குள் இரண்டு தீர்வுகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெற்றவை.அவையாவன,பதின் மூன்றாவது திருத்தம்.எக்கிய ராஜ்ஜிய.
இந்த இரண்டு தீர்வுகளையும் தவிர ஏனைய தீர்வுகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் அவற்றுக்காகப் போராட வேண்டும். சமஸ்டியாக இருந்தாலும் சரி தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்படும் சர்வசன வாக்கெடுப்பாக இருந்தாலும் சரி இரண்டுக்குமாக தமிழ்மக்கள் போராட வேண்டும்.கொழும்புக்கு நோகத்தக்கதாகப் போராட வேண்டும்.அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத்தக்கதாகப் போராட வேண்டும்.இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால்,இலங்கைத் தீவின் அரசியல் வலுச் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்குப் போராட வேண்டும்.
ஏனைய இரண்டு தீர்வுகளையும் பொறுத்தவரை,குறிப்பாக எக்கிய ராஜ்யவுக்காக அதிகம் போராட வேண்டியிருக்காது.ஆனால் 13ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரையிலும் அதற்காகவும் போராட வேண்டும். ஏனென்றால் அது எழுதப்பட்டபோது இருந்த வடிவத்தில் இப்பொழுது இல்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அது தோல் இருக்கச் சுளை பிடுங்கப்பட்டுவிட்டது.எனவே பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்று சொன்னால் அதற்கும் போராடத்தான் வேண்டும்.
இப்பொழுது மிகத்தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கிறது.போராடத் தயாராக இருந்தால் பருமனால் பெரிய தீர்வைக் கேட்கலாம்.போராடத் தயார் இல்லை என்றால் எக்கிய ராஜ்யவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது 13 இல் இருந்து என்று கூறிக்கொள்ளலாம்.
எனவே இங்கு எது தீர்வு என்பதை எது தீர்மானிக்கிறது என்றால்,தமிழ் மக்கள் போராடத் தயாரா இல்லையா என்பதுதான்.இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால் தமிழ் மக்களை ஒரு போராட்டத்தை நோக்கித் தயார்படுத்தவும், அதற்குத் தலைமை தாங்கவும் குறிப்பிட்ட தீர்வுகளை முன்வைக்கும் தரப்புகள் தயாராக இருக்கின்றனவா இல்லையா என்பதுதான்.
இதை ஏன் அன்னை பூபதியின் நினைவு நாளில் கூற வேண்டியிருக்கிறது? ஏனென்றால், அன்னை பூபதியைப் போல.தன்னை ஒறுத்து, தனது பசி தாகத்தை ஆயுதமாக முன்வைத்து,போராடத் தக்கவர்கள் எத்தனை பேர் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? அன்னை பூபதியை ஆண்டுதோறும் நினைவு கூரும் கட்சிகள் மத்தியில் இருந்து ஏன் ஒரு அன்னை பூபதி கூடத் தோன்றவில்லை? திலீபனும் அன்னை பூபதியும் ஆண்டுதோறும் கௌரவிக்கப்படும் நினைவுகளாக மட்டும் சுருங்கிப் போய் விடுவார்களா?













