மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி இன்று (19) கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்பபட்டது.
மட்டக்களப்பு சித்தாண்டி சமூகமட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஏறாவூரப் பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், உறுப்பினர்கள் ஆலய நிருவாகத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டுகழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சித்தண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்களையெழுப்பி பேரணியாக சித்தண்டி இந்து மயான வீதிவரை சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தாயைக் கொன்றது சேய் போதையே எமக்கு தீராத நோய், காப்பாற்று காப்பாற்று போதையிடமிருந்து சிறுவர்களை காப்பாற்று, பிரதேச செயலாளரே இப்போதாவது கண் திறந்துபார், பாராளுமன்ற உறுப்பினர்களே போதைப் பொருள் தொடர்பாக எமது பிரதேசத்தில் கவனம் எடு, பொலிஸாரே நடவடிக்கையை துரிதப்படுத்து, அதிகாரம் நம்பிக்கை அதை போதை கும்பலுக்கு ஒப்படைக்காதே, வளக்கறிஞ்சர்களே போதைபொருள் வியாபாரிகளுக்காக வாதாடுவதை நிறுத்து, நீதித்துறையே போதைக்கெதிரான தண்டனையை அதிகப்படுத்து போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தி கோசங்களையெழுப்பி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு போராட்ட முடிவில் தமது கோரிக்கைகைள் அடங்கிய மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்திடம் கையளித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத வடிசாராத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் கலந்துரையாடி நடவடிக்கையெடுப்படும்.
சித்தாண்டி மாவடிவேம்பு பகுதிகளில் அதிகரித்துவம் சட்டவிரோத விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்கூட்டங்களில் பேசி நடவடிக்கையெடுக்கபடும் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை (17) சித்தாண்டியில் மதுபானம் வாங்குவதற்கு பணம் வழங்க மறுத்த தாயை தள்ளிவிடடு கொலை செய்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.













