மட்டக்களப்பில் கடற்படை அதிகாரியால் மீனவர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பொலிஸார் நீதியை வழங்க மறுப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதி செட்டிபாளையம் கடற்கரையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரை, கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.
சுருக்கு வலை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, சுட்டெரிக்கும் வெயிலில் அவரை இரண்டு மணித்தியாலங்கள் முழங்காலில் இருத்தி, மக்கள் முன்னிலையிலேயே கொடூரமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மீனவர் சர்க்கரை நோயாளியாவார். தாக்குதலால் காயமடைந்த அவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தாக்கப்பட்டதைச் சட்ட மருத்துவ அதிகாரியும் (JMO) உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணையைத் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்வதாக பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது மனைவி மட்டக்களப்பில் நேற்று (18) ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
“தாக்கிய அதிகாரி இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார்”, “பயிற்சியில் உள்ளார்” எனப் பல்வேறு காரணங்களைக் கூறி பொலிஸார் விசாரணையைத் தள்ளிப்போட்டு வருகின்றனர்.
நீதி வேண்டி மட்டக்களப்பில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த உயர் அதிகாரி ஒருவர், “கடற்படை அதிகாரி அடித்தது சரிதான், அவரை எங்களால் கைது செய்ய முடியாது” எனக் கூறியதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இத்தகைய ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்துள்ள அக்குடும்பத்தினர், தமக்கு உரிய நீதி கிடைக்காவிடில் ஓரிரு தினங்களில் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.
மீன்பிடித் தடை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, ஒரு குடிமகனை பகிரங்கமாகச் சித்திரவதை செய்வதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு? என்ற கேள்வி இப்போது சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.













