கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக, பொரளை பொலிஸார் நேற்று (27) ஒரு சிறைக் காவலாளியையும் ஒரு காவலரையும் கைது செய்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சிறைக்குள் இரண்டு கைதிகளுக்கும் ஒரு காவலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர்.
மோதலையடுத்து அனைவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, கைதிகளில் ஒருவரான, கொழும்பு 14, நவகம்புரவைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்தவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












