கஹவத்தை, நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் மற்றும் அங்குள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
பெருந்தோட்டப் பகுதிகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் அடியாட்களை வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என இதன்போது அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
அத்துடன், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
குறித்த பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சர்ச்சைக்குரிய பாதுகாப்பு குழுவினர் தொடர்பாக நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகச் செயற்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணியை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க, தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளரும் இச்சந்தர்ப்பத்தில் உடனிருந்தனர்.














