இரண்டு மாதப் போரைத் தீர்ப்பது குறித்த ஈரானின் அண்மைய முன்மொழிவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது, எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து, பணவீக்கத்தைத் தூண்டி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த இவ்மோதலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் குறைத்துள்ளது.
போர் முடிந்து, வளைகுடாப் பகுதியிலிருந்து வரும் கப்பல் போக்குவரத்து தொடர்பான சர்ச்சைகள் தீர்க்கப்படும் வரை, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்கும் வகையில் ஈரான் தனது அண்மைய முன்மொழிவை முன்வைத்துள்ளது.
அணுசக்திப் பிரச்சினைகளை ஆரம்பத்திலிருந்தே கையாள வேண்டும் என்று கூறும் அமெரிக்காவை இது திருப்திப்படுத்த வாய்ப்பில்லை என்றும், அந்தக் காரணத்தினாலேயே ஈரானின் முன்மொழிவில் ட்ரம்ப் அதிருப்தி அடைந்தார் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டார்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ல் ஏற்பட்ட முந்தைய ஒப்பந்தம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கடுமையாகக் குறைத்தது.
அந்தத் திட்டம் அமைதியான, குடிமக்கள் நோக்கங்களுக்காகவே என்று ஈரான் நீண்ட காலமாக கூறிவந்தது.
ஆனால் ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகியபோது அது முறிந்து போனது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வார இறுதியில் இரண்டு முறை இஸ்லாமாபாத்திற்குச் சென்று வந்த நிலையில், கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் மேற்கொள்ளவிருந்த பயணத்தை அவர் இரத்து செய்ததிலிருந்து, சமாதான முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கைகள் மங்கிவிட்டன.
அராக்சி ஓமானுக்கும் பயணம் மேற்கொண்டார், மேலும் திங்களன்று ரஷ்யாவுக்குச் சென்றார்.
அங்கு அவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்து, தனது நீண்டகால நட்பு நாட்டிடமிருந்து ஆதரவு வார்த்தைகளைப் பெற்றார்.













