இம்முறை மே தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பினை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.
இம்முறை மே தினப் பேரணிகளில் தங்களது கட்சியுடன் இணைந்து கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மே மாதம் முதலாம் திகதி பௌர்ணமி (சித்திரை புத்தாண்டுப் பௌர்ணமி) தினமாக அமைவதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளைத் தவிர்த்து, முழுமையாக மத வழிபாடுகளுக்காக ஒதுக்க ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌர்ணமி தினங்களில் அரசியல் பேரணிகளை நடத்துவது பொருத்தமற்றது என முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டிருந்த வரலாற்று ரீதியான மரபினை தலதா அத்துக்கோரள தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ளார்.
இந்தக் காரணத்தினால் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து மே தினப் பேரணிகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும்:ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, எதிர்கால அரசியல் ரீதியான பொதுத் தீர்மானங்களில் இணைந்து பயணிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே தினத்தை மதச் சார்ந்து கழிக்க ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு, அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.













