மேற்கு வங்கத்தில் தனது முதல் அரசாங்கத்தை அமைக்க உள்ளதாலும், அசாமில் தனது கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதாலும், திங்களன்று (04) நடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி (BJP) வரலாறு படைத்தது.
அதேநேரம், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, இரண்டு திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து தமிழகத்தில் வரலாறு படைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மாபெரும் வெற்றி பெற்றதுடன், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி எளிதாக வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி, அக்கட்சிக்கு ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது.
ஏனெனில், பல ஆண்டுகளாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதிக்கத்தில் இருந்த அந்த மாநிலத்தில், அக்கட்சி நீண்ட காலமாக ஒரு முக்கியத்துவம் இல்லாத சக்தியாகவே இருந்து வந்தது.
மேலும், இது பாஜகவின் சித்தாந்தவாதியான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் சொந்த மாநிலமாகும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அங்கு பாஜக 77 இடங்களை வென்றிருந்தது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அண்மைய முடிவுகளின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக 207 இடங்களை வென்றுள்ளது; இது அதன் தலைவர்கள் கற்பனை செய்துகூடப் பார்க்காத ஒரு சாதனையாகத் தெரிகிறது.
இந்த வெற்றி, பாஜகவின் பிரச்சாரத்தின் உறுதியைப் பிரதிபலித்தது. அப்பிரச்சாரத்தின்போது, ஆளும் திரிணாமூல் காங்கிரஸைத் தாக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சினையையும் அது பெரிதுபடுத்தியது.
மேலும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தலில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் நிலவியதால், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான வாக்குறுதிகளை வழங்குவதிலும் பாஜக திரிணாமூல் காங்கிரஸை விஞ்சியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 212 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 80 இடங்களுடன் வெகுதூரம் பின்தங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
தேர்தலின் மிகவும் அதிர்ச்சியூட்டும் முடிவுகளில் ஒன்றாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தனது பாரம்பரிய பவானிபூர் தொகுதியை பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் இழந்தார்.
மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் மோசமான செயல்பாட்டைக் காட்டின.
காங்கிரஸ் இரண்டு இடங்களையும், சிபிஐ-எம் ஒரு இடத்தையும் வென்றன.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது.
தமிழகம்
தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து வாக்கு வங்கியை கைப்பற்றியதன் மூலம் நடிகர் விஜய் ஒரு புதிய சாதனையைப் படைத்தார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 107 இடங்களை வென்றது; பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்கள் தேவை.
திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் வென்றன. காங்கிரஸ் ஐந்து இடங்களையும், தேமுதிக மூன்று இடங்களையும் வென்றன.
மாநிலத்தில் இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த விஜய், அந்தத் தென்னிந்திய மாநிலத்தில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு இருக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
அவர் தனது செல்வாக்கை, திமுக தலைமையிலான அரசுக்கு எதிரான அதிருப்தியை அதிகரிக்கும் ஒரு செயல்திட்டத்துடன் இணைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையே ஆட்சி மாறி மாறி வருவதால் சலிப்படைந்த மாநில மக்கள், ஒரு புதிய கண்ணோட்டத்துடன் வந்த போட்டியாளருக்கே தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்ததால் விஜய்க்கு இந்த வெற்றி கிட்டயது.
கேரளா
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வியத்தகு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 10 ஆண்டுகால இடது ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சிக்குப் பிறகு அந்தத் தென்னிந்திய மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
கேரளாவின் வெற்றி காங்கிரஸுக்கு ஊக்கமளித்தாலும், அதன் மூத்த மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய் தேர்தலில் தோல்வியடைந்த அசாமில், அக்கட்சி எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படத் தவறியது.
140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அக்கட்சி தனித்து 63 இடங்களை வென்றது.
சிபிஐ-எம் 26 இடங்களையும், சிபிஐ எட்டு இடங்களையும் வென்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் அரசை வீழ்த்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது.
ஆனால், இம்முறை முதலமைச்சர் பிரச்சினையைத் தேர்தலுக்குப் பிறகு தீர்க்கப்படும் என்ற நிலையில், ஒப்பீட்டளவில் ஒன்றுபட்ட பிரச்சாரத்தை நடத்தியது.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த நிலையில், கேரளாவில் காங்கிரஸுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
ஹரியானா தேர்தலில் வெற்றியை காங்கிரஸ் தன் கைகளிலிருந்து நழுவ விட்டதாகக் கருதப்பட்டது.
கட்சிக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைத்துள்ளதாக கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
அதேநேரம், கேரளத்தில் ஏற்பட்ட தோல்வி, தற்போது நாட்டின் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத இடதுசாரிக் கட்சிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம்
அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து, 126 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 102 இடங்களை கைப்பற்றியது.
ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு மாநிலத்தில் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
மேலும், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜக தனது செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளது.
அண்மைய தேர்தலில் அசாமில் பாஜக 82 இடங்களைக் கைப்பற்றியது, இது மாநிலத்தில் அக்கட்சி பெற்ற அதிகபட்ச இடங்களாகும்.
அதன் கூட்டணிக் கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி (BoPF) மற்றும் ஏஜிபி தலா பத்து இடங்களை வென்றுள்ளன.
புதுச்சேரி
புதுச்சேரியில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களையும், பாஜக நான்கு இடங்களையும் கைப்பற்றியது.
புதுச்சேரியில் டி.வி.கே.வும் இரண்டு இடங்களை வென்று தனது கணக்கைத் தொடங்கியது.
அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் திகதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் திகதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.














