ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (05) மாலை அறிவித்தார்.
ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.
ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணியின் ஆரம்பகட்ட தாக்குதலான ‘Operation Epic Fury‘, அதன் இலக்குகளை அடைந்த பின்னர் முடிவுக்கு வந்துவிட்டதாக வொஷிங்டனின் வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக ட்ரம்ப் கூறினார்.
எனினும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ட்ரம்பின் பதிவைத் தொடர்ந்து, அமெரிக்க மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் $2.30 சரிந்து, ஒரு பீப்பாய்க்கு $100-க்கும் கீழே சென்றது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மோதல் காரணமாக எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்ததிலிருந்து, இது பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு வரம்பாகும்.
என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது அல்லது இந்த இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.














