நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு பிரதம நீதியரசரிடம் முறையிட்டுள்ளது.
மே தினக் கூட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரி, மக்கள் கூட்டு எதிர்க்கட்சி (People’s Combined Opposition) பிரதம நீதியரசருக்கு விசேட மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் கருத்துக்கள் பாரதூரமான சட்ட மீறல்கள் என்று சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
மஹரகமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மே 30-ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ள ஒரு வழக்கின் தீர்ப்பு, மே 25-ஆம் திகதியே தமக்குக் கிடைத்துவிடும் என்றும், அதனை அனைவரும் கைதட்டி வரவேற்கத் தயாராக இருக்குமாறும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வழக்கின் தீர்ப்பை அந்த நீதிபதி மட்டுமே அறிவார்.
அதனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.
அவ்வாறிருக்கையில், ஜனாதிபதி எவ்வாறு முன்கூட்டியே தீர்ப்புத் திகதியையும் முடிவையும் அறிவிக்க முடியும் என ஜி.எல். பீரிஸ் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற வகையில் தலையிடுவது பாரதூரமான குற்றமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிரஜாவுரிமை (வாக்குரிமை) பறிக்கப்படும் தண்டனையும் சட்டத்தில் உள்ளதாக நினைவூட்டினார்.
எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து இந்த மகஜரை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் பிரதம நீதியரசர் இதில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் நீதித்துறை மீதான நிறைவேற்று அதிகாரத்தின் நேரடித் தலையீடாகக் கருதப்படுவதால், அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் இந்தப் பிரச்சினை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.














