பெய்ஜிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாட்டை இருவரும் தொடங்கிய நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே சிறந்த உறவுகள் நிலவ வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அழைப்பு விடுத்தனர்.
உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாகப் பேசிய ஜி ஜின்பிங், சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக அல்ல, பங்காளர்களாக இருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விட பொதுவான நலன்களே அதிகம் என்றும் அழைப்பு விடுத்தார்.
மேலும், 2026-ஆம் ஆண்டை அமெரிக்க-சீன உறவுகளில் ஒரு வரலாற்றுப் புதுப்பித்தல் ஆண்டாக மாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதன்போது, ஜியை ஒரு சிறந்த தலைவர் என்று வர்ணித்த ட்ரம்ப், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு முன்னெப்போதையும் விட சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
ட்ரம்ப் புதன்கிழமை அன்று அமெரிக்காவின் முக்கிய வணிகத் தலைவர்கள் குழுவுடன் பெய்ஜிங் சென்றடைந்தார்.
கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் ஒரு அமெரிக்கத் தலைவர் மேற்கொள்ளும் முதல் சீன அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
2025-ஆம் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் நீடித்த கடுமையான வர்த்தகப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சில்லுகள் குறித்த தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ட்ரம்ப் தனது இந்த சீனப் பயணத்தில் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை இணைத்துக்கொண்டது, சீனாவுக்கான அமெரிக்க சிப் விற்பனை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சில நம்பிக்கைகளைத் தூண்டியுள்ளது. தனது பயணத்திற்கு முன்பு, அமெரிக்க வணிகத்திற்காக சீனாவை திறந்துவிடுமாறு ஜி ஜின்பிங்கிடம் கோருவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந் நிலையில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ள பேச்சுவார்த்தைகளில் ட்ரம்பும் ஜி ஜின்பிங்கும் கடினமான தலைப்புகள், குறிப்பாக தைவான் குறித்து விவாதிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சீனா உட்பட ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடைசெய்துள்ள, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போர் குறித்தும் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.













