பிரான்சில் தற்போது நிலவும் வெப்ப அலை தொடர்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் துணை எரிசக்தி அமைச்சர் மௌட் ப்ரேஜியன் (Maud Bregeon) இன்று (26) தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த ஏழு பேரில் ஐந்து பேர் ஏரிகள், ஆறுகள் அல்லது கடற்கரைகளில் நீரில் மூழ்கிய சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, விளையாட்டுப் போட்டிகளின் போது மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்தாகவும் மௌட் ப்ரேஜியன் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை முதல் பிரான்சில் சராசரியை விட அதிக வெப்பநிலை நிலவி வருகிறது.
இன்று பிற்பகலில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரான்சின் மெட்டியோ வானிலை ஆய்வு நிலையம் பிரிட்டானியின் (Brittany ) பெரும்பாலான பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் வெப்ப அலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















