2026 ஜூலை 1 முதல் செப்டம்பர் மாதம் 30 திகதி வரையிலான காலகட்டத்திற்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் எரிசக்தி விலை உச்சவரம்பை 13 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிரிட்டனின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகமான ஆஃப்ஜெம் (Ofgem), இன்று (27) அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு அமைவாக இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள குடும்பங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தக் கோடையில் கடுமையான எரிசக்தி கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள்.
ஈரான் மீதான போரினால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி சந்தை விலை உயர்வை ஈடுசெய்யும் வகையிலான இந்த உச்சவரம்பின் கீழ், எதிர்வரும் ஜூலை முதல் செப்டம்பர் மாத இறுதி வரை சராசரி எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு 1,862 பவுண்டுகள் அதாவது 2,505 அமெரிக்க டொலர்களுக்கு சமமான அளவிற்கு அதிகரிக்கும்.
புதிய எரிசக்தி விலை உச்சவரம்பின் கீழ், வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம், தற்போதுள்ள ஒரு கிலோ வாட் மணிநேரத்துக்கு 24.67 பென்ஸிலிருந்து 26.11 பென்ஸாகவும், எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோ வாட் மணிநேரத்துக்கு 5.74 பென்ஸிலிருந்து 7.33 பென்ஸாகவும் உயரும்.














