பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 18 வயது பல்கலைக்கழக மாணவன் ஒருவரை, பொலிஸார் தவறாகக் கைது செய்து கைவிலங்கு பூட்டிய சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சவுதாம்ப்டன் (Southampton) நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில், முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவரான ஹென்றி நோவாக் (Henry Nowak) என்பவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக 23 வயதுடைய விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்ற இளைஞன் குற்றவாளி என நேற்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் பொலிஸ் திணைக்களம் தங்களது தவறுக்காக பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது.
சம்பவத்தின்போது தான் தான் பாதிக்கப்பட்டவர் எனவும் ஹென்றி நோவாக் தன்னை தாக்கியமையினால் தான் பாதுகாப்பிற்காக அவரை தாக்கியதாகவும் கொலையாளி விக்ரம் திக்வா போலீசாரிடம் பொய் வாக்குமூலம் வழங்கியமையினால் பொலிஸார் காயமடைந்து இருந்த ஹென்றி நோவாக்கை வைத்தியசாலையில் அனுமதிக்காது கை விலங்கிட்டனர்.
இந்த நிலையில் பொலிஸாரின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை குறித்து ‘சுயாதீன பொலிஸ் நடத்தைக்கான அலுவலகம்’ (IOPC) தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.














