பிரதமர் கீர் ஸ்டார்மரினால் அறிவிக்கப்பட்டுள்ள 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடை உத்தரவுக்கு, அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்புகளைத் தவிர்ப்பதற்கான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் அமைச்சர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
எக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டிக் டொக் உள்ளிட்ட பிரதான சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை முடக்குவதற்காகக் கொண்டுவரப்படவில்லை என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்குப் பிரித்தானிய அதிகாரிகள் பல வாரங்களாக முயற்சித்துவருகின்றனர்.
பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி-7 உச்சிமாநாட்டின் இடையே, ஜனாதிபதி ட்ரம்பை பிரதமர் கீர் ஸ்டார்மர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள பின்னணியில், இந்த விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தத் தடை உத்தரவு சிறுவர்களின் மனநலனைப் பாதுகாப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஸ்டார்மர் நியாயப்படுத்தியுள்ளார்.
என்ற போதிலும், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான Elon Musk, இந்தச் சட்டம் அரசாங்கம் அனைவரையும் கண்காணிப்பதற்கான ஒரு தந்திரம் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எனினும், 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் இத்தடையை முழுமையாக நடைமுறைப்படுத்தப் பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















