ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் புதிய வகை ‘எபோலா’ (Ebola) போர்டான தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐக் கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுவரை ஒட்டுமொத்தமாக 894 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய எபோலா அலைகளுடன் ஒப்பிடுகையில் ஆரம்பக் கட்டத்திலேயே மிக மோசமான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய அலையாக இது பதிவாகியுள்ளது.
பதிவாகியுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் கொங்கோவின் கிழக்கு மாகாணமான இதுரி பகுதியிலேயே பதிவாகியுள்ளன.
இத்தொற்று தற்பொழுது கொங்கோவின் எல்லையைக் கடந்து அண்டை நாடான உகாண்டாவிற்கும் பரவியுள்ளது.
அங்கு 19 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.
இத்தொற்றுப் பாதிப்பானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்பொழுது 38 சதவீதம் வரை மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது.
இக்கட்டான இச்சூழலை எதிர்கொள்வதற்குக் களத்தில் போதிய மருத்துவப் பணியாளர்களோ அல்லது மருத்துவ உபகரணங்களோ இல்லாதது ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் உறுதியளித்த நிதியில் வெறும் 10 சதவீதம் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளதால், எபோலா ஒழிப்புப் பணிகள் கடுமையான தேக்கநிலையைச் சந்தித்துள்ளன.
















