இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை ஈரானுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த உதவும் வகையில், ஈரானுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கத் தூதுவர’; சுவிட்சர்லாந்து செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய போர் நிறுத்தம் ஒப்பந்தம் தற்போதைய நிலையில் பிராந்திய பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் காணப்பட்ட போதிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் இராணுவ இருப்பு மற்றும் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களின் எதிர்காலம் உள்ளிட்ட, மோதலின் மையத்தில் உள்ள முக்கிய சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், லெபனானுக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் நோக்கத்தை நிராகரிப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தொடரும் பதட்டங்கள், லெபனான் உட்பட “அனைத்து முனைகளிலும்” சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை உள்ளடக்கிய, ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் வொஷிங்டன் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது
எனவே ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த உதவும் வகையில், ஈரானுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் சுவிட்சர்லாந்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நபாத்தியா மாவட்டத்தில், இஸ்ரேலியப் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பீரங்கிகள் பல பகுதிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் குறைந்தது பன்னிரண்டு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா குழு 50-க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசியதைத் தொடர்ந்து, “ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது

















