வலி வடக்கில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன் வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,கிழக்கில் மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரைகளை மீட்பதற்கான போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால், அந்த மனிதப் புதை குழியானது இலங்கைத் தீவில் உள்ள ஆகப் பெரிய மனிதப் புதை குழியாக மேலெழுந்திருக்கும் ஓர் அரசியல் சூழலில்,அவ்வாறு இலங்கைத் தீவின் ஆகப்பெரிய மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு நாட்டின் நீதி அமைச்சர் முதன்முதலாக செம்மணிக்கு வருகை தந்திருக்கும் ஒரு காலச் சூழலில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழர்களையும் முஸ்லிம்களையும் கடுமையாக வதைத்த குற்றச்சாட்டுக்குரிய சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக ஆஸ்பத்திரியில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று அவருடைய குடும்பத்தவர்களும் இனவாதிகளும் கூச்சல் எழுப்பும் ஒரு காலகட்டத்தில், கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் ஒரு காலச் சூழலில்,
தமிழ் மக்கள்,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ஜுனா,கஜேந்திரக்குமாரை அவமதித்துப் பேசும் காட்சியை காணொளிகளில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதன் விளைவாக அர்ஜுனாவின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு,யாழ். பிரதான வீதியில் அந்தக் கட்டவுட் நிறுத்தப்பட்டதை,தமிழ் மக்கள் காணொளிகளில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அர்ஜுனா தனி ஆளாகப் போய் அதனைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு வருவதையும் காணொளிகளில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழ் அரசியல் அச்சுனாவுக்கு எதிர்வினை ஆற்றுவதாக இருப்பது ஆரோக்கியமானதா? ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ஜுனா கஜேந்திரக்குமாரை அவமதிப்பிற்காக அவருடைய உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிப்பது என்பது அர்ஜுனாவின் தரத்துக்கு இறங்கி செல்வதுதான். தமிழ்த் தேசிய அரசியல் பண்பாட்டின் குறியீடாக அதைப் பார்க்கலாமா?
அர்ஜுனாவை யாரோ இயக்குகிறார்கள்,அல்லது பயன்படுத்துகிறார்கள் ,ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை அவர் குழப்புகிறார்…. என்றெல்லாம் சந்தேகங்கள் உண்டு.இந்தச் சூழ்ச்சிக் கோட்பாடுகள் உண்மையாக இருந்தால்,இந்தச் சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடம் என்ன உபாயம் உண்டு?
அரசியல் எதிரியின் உருவப் படத்துக்கு செருப்பு மாலை போடும் அரசியலானது அர்ஜுனாவைப் பாதிக்காது. அது யாருக்காவது பழிவாங்கிய திருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் அர்ஜுனாவைத் தடுத்து நிறுத்தாது. அவர் சராசரி வெட்க, துக்க அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டவர்.இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளால் அர்ஜுனாவைத் தடுத்து நிறுத்தலாம் என்று நம்பினால் அதைச் செய்தவர்கள் அர்ஜுனாவை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று பொருள்.அர்ஜுனாவை உற்பத்தி செய்த அரசியல் சூழலை எதிர்கொள்வதற்குத் தேவையான புதிய உபாயங்கள் அவர்களிடம் இல்லை என்று பொருள்.
அர்ஜுனாவை உற்பத்தி செய்த அதே அரசியல் சூழல்தான் அர்ஜுனாவை கட்டுப்படுத்த முடியாத அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உற்பத்தி செய்தது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அர்ஜுனா மட்டும் வெல்லவில்லை.தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் மூன்று பேர் கிடைத்தார்கள். யாழ்ப்பாணத்தைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சந்திரசேகரனும் உட்பட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்களால் அர்ச்சனாவைக் கையாள முடியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எனவே இங்கு பிரச்சனை அர்ஜுனா மட்டுமல்ல.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் விட்ட தவறுகளின் விளைவாக அர்ஜுனா ஒருவர் மட்டும் வரவில்லை.மூன்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.தமிழ்த் தேசியக் கட்சிகள்,செயற்பாட்டாளர்கள் விட்ட தவறுகளின் விளைவு அது.அந்தத் தவறுகள் கடந்த 20 மாத காலப் பகுதிக்குள் திருத்தப்பட்டு விட்டனவா?
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரக்குமாரை நோக்கிக் கேள்வி கேட்டவர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள்.தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள், பிரமுகர்கள் வடக்கிற்கு வரும்பொழுது அவர்களோடு அருகே காணப்படும் சிலர் அன்றைக்கு கேள்வி கேட்டவருக்கு அருகே காணப்பட்டார்கள்.அவர்கள் கஜேந்திரக்குமாரை நோக்கித் திட்டமிட்டுக் கேள்வி கேட்டார்கள்.கஜேந்திரகுமார் அதனை அங்கே சுட்டிக்காட்டுகிறார்,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை எதிர்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுச் செயற்படுவது தெரிகிறது.
இந்த உபாயத்தின் ஒரு கருவியாக அர்ஜுனா இருக்கலாம்.அல்லது அர்ஜுனாவின் இயல்பை அந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம்.எதுவாகவும் இருக்கலாம்.தேசிய மக்கள் சக்தியிடம் ஓர் ஒருங்கிணைந்த உபாயம் உண்டு என்பது மட்டும் தெரிகிறது.ஒரு தென்னிலங்கை மையக் கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெற்ற வெற்றி என்பது அண்மை தசாப்தங்களில் இதற்குமுன் ஏற்பட்டிராத ஒரு மாற்றம்.அந்த மாற்றத்தை அதன் அடுத்தடுத்த கட்டத்திற்கு பலப்படுத்துவதற்காக அவர்கள் உழைக்கிறார்கள் என்று தெரிகிறது.எனவே அதை நோக்கித்தான் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது கவனத்தைக் குவிக்கவேண்டும். ஒரு கருவியாகிய அர்ஜுனாவை நோக்கி அல்ல.
மேலும்,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நிர்ணயகரமானவயா? கடந்த 17 ஆண்டுகளாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட எத்தனை முக்கியமான முடிவுகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? கிளிநொச்சியில் கள்ள மண் அகழ்வு,போதைப்பொருள் தடுப்பு போன்ற விடயங்களில் ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஊடகவியலாளர்கள் முன்வைக்கிறார்கள்.ஏன் அதிகம் போவான்? தையிட்டி விகாரை கட்டப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைப்புக் குழுவில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் இயலாமையை நிருபிக்கும் வெளிப்படையான உதாரணம் தையிட்டி விகாரை.
இப்படிப்பார்த்தால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைத் தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய சேதம் அதிகமா?அல்லது அங்கிருந்து கிடைக்கும் காணொளிகளால் தமிழ்த் தேசிய அரசியல் சிரிப்புக்கிடமாக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய சேதம் அதிகமா?
எனவே தமிழ் தேசியக் கட்சிகள் முதலில் அர்ஜுனாவுக்கு பதில் வினையாற்றுவதை நிறுத்த வேண்டும். அர்ஜுனாவை உற்பத்தி செய்த கடந்த சுமார் 20 மாத காலத்துக்கு முன்பிருந்த அந்த அரசியல் சூழலை எப்படி தலைகீழாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும்.
தென்னிலங்கையில் பாரம்பரிய கட்சிகளான யு.என்.பி,எஸ்.எல்.எஃப்.பி போன்றன சிதைந்துவிட்டன. அவற்றிலிருந்து உருவாகிய புதிய கட்சிகள்தான் அரங்கில் உண்டு.ஏன் ஜேவிபிகூட தன்னை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றிக் கொண்டுதான் வெற்றி பெற்றது.ஆனால் தமிழில் பாரம்பரிய கட்சிகள் இரண்டும் அப்படியே இருக்கின்றன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அவமானகரமான தோல்விக்குப் பின் தமிழ்த் தேசியக் கட்சிகள் அந்த தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டுள்ளனவா? கடந்த 20 மாத காலப்பகுதிக்குள் தங்களைப் பலப்படுத்தியிருக்கின்றனவா?
இருக்கின்ற கட்சிகளுக்குள் பெரியது தமிழரசு கட்சி.அதற்குள் காணப்படும் அக முரண்பாடு இரண்டு ஆண்டுகளாகத் தீர்க்கப்படவில்லை.தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் திரைத் தொடர்களைப்போல அது நீண்டு கொண்டே போகிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் முன்பு ஒரு பெண் செயற்பாட்டாளர் முன்னணியில் காணப்பட்டார்.அவர் இப்பொழுது அக்கட்சியோடு இல்லை.அண்மையில் நடந்த மகளிர் தின விழாவில் அவர் வீரசிங்க மண்டபத்தில் ஒரு தனிக் கூட்டத்தை நடத்தினார்.முன்னணிக்குள் மீண்டும் ஓர் உடைவு.
எனவே தொகுத்துப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்குப் பின்னரான கடந்த சுமார் 20 மாத காலப் பகுதிக்குள், தமிழ்த் தேசிய கட்சிகள் தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டிருக்கின்றன என்று நம்பத்தக்க மாற்றங்கள் எவையெவை?
மேலும்,தமிழ்நாட்டில் விஜய் எப்படி வெல்ல முடிந்தது? பாரம்பரிய கட்சிகள் எப்படி தோற்கடிக்கப்பட்டன?..போன்ற விடயங்களைக் குறித்து தமிழ்க் கட்சிகளிடம் ஆழமான,கணிதபூர்வமான,விஞ்ஞான பூர்வமான பார்வைகள் உண்டா?
தமிழ்நாட்டின் பாரம்பரிய இரு துருவ அரசியலை விஜய் உடைத்திருக்கிறார். சினிமா மாயைக்கூடாக அவர் கட்டியெழுப்பிய ரசிகத் தளம் அவரை வெற்றி பெற வைத்திருக்கின்றது.தமிழகத்தில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளும் பின்னடையும்போது அங்கே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஒரு மூன்றாவது தளம் இருந்தது.ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளும் பின்னடைவைக் காணுமாக இருந்தால், குறிப்பாக உள்ளதில் பெரிய கட்சி தனக்குள்தானே பிளவுண்டு மேலும் பலவீனமடையுமாக இருந்தால், அங்கே இரண்டு கட்சிகளும் விட்ட இடைவெளியை நிரப்ப போகும் மூன்றாவது தரப்பு எது? தேசிய மக்கள் சக்தியா? அல்லது அர்ஜுனாக்களா? அல்லது யூ டியூபர்களா?















