இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார். அவரது கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது, அந்த பெண் கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்தது தெரியவந்தது. தற்போது இந்திய குடியுரிமை பெற்ற பெண் போல் இந்திய கடவுச்சீட்டு மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் அந்த பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்திய போது, அவர் இலங்கையை சேர்ந்த 58 வயதான மெரினா ஆனி என்றும், கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்ததும், அதன் பிறகு குவைத் சென்று பின்னர் 2003ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியா வந்து விருதுநகரில் குடியேரியதும் தெரியவந்தது.
பின்னர் மெரினா ஆனி தான் இந்திய குடியுரிமை பெண் போல் இந்திய ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று, தன்னை இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய கடவுச்சீட்டு பெற்று சொந்த நாட்டிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது.
அதைதொடர்ந்து பொலிஸார் மெரினா ஆனியை கைது செய்தனர். அவரிடம் இருந்து இந்திய நாட்டின அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.














