இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் நிதியியல் முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினர் இன்றைய தினம் (30) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் விடுத்த அழைப்பின் பேரில், கடந்த ஜூன் 24ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த இந்த உயர்மட்ட அதிகாரிகள் குழு, 7 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது.
ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி (CBSL) ஆளுநர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களை இக்குழுவினர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ், அரசாங்கம் எட்டியுள்ள வருமான இலக்குகள், புதிய வரி ஆளுமைக் கொள்கைகள் மற்றும் எதிர்கால நிதி நிலைத்தன்மை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
தங்களது 7 நாட்கள் உத்தியோகபூர்வ கள விஜயத்தை இன்றுடன் (30) நிறைவு செய்துகொள்ளும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்த தங்களது உத்தியோகபூர்வ அறிக்கையை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.














